11.மனித உரிமை பிரச்சினைகள்

மனித உரிமைகள்:

மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில் அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை, வேலை மற்றும் கல்விபெறும் உரிமை ஆகியவை அடங்கும்.

மனித உரிமைகள் என்ற கருத்து எங்கிருந்து ஆரம்பித்தது?

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.

அ. எழுதப்பட்ட மனித உரிமை ஆவணங்களின் முன்னோடி மகா சாசனம் (The Magna Carta), 1215 (இங்கிலாந்து)- மக்களுக்குப்புதியஉரிமைகளை வழங்கியதுடன் அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்தியது.

உரிமை மனு (The Petition of Right), 1628 (இங்கிலாந்து) – மக்கள்உரிமைகளின்தொகுப்பு. ஹேபியஸ் கார்பஸ் சட்டம், 1679, இங்கிலாந்து – மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்.

ஆங்கில உரிமைகள் மசோதா, 1689 – சில அடிப்படை சமூக / குடிமக்கள் உரிமைகளை அமைத்தல்.

மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு, 1789 – சட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம்.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா, 1791 – குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.

ஆ. ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்

மனித உரிமைகள் பற்றிய சிந்தனை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வலுவாக எழுச்சி பெற்றது. இப்போர் கற்பனை செய்ய முடியாத வகையில் மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்தது. போர்க் காலங்களில் மனித உயிர்கள் அதன் மதிப்பினை இழந்தன. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை கடுமையாக போராட வேண்டியிருந்தது. தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை இரண்டாம் உலகப் போரின் போது நடந்த கொடுமைகள் தெளிவுபடுத்தின. உலகின் பல பகுதிகளில் பல்வேறு காரணங்களால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன மற்றும் நீக்கப்பட்டன. இது சில நாட்டின் அரசாங்கத்தால் மட்டுமே மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை நிரூபித்தது. வாழ்க்கை, சுதந்திரம், உணவு, இருப்பிடம், தேசம் ஆகியவை நியாயமற்ற முறையில் மறுக்கப்படமாட்டாது என்பதை மக்கள் உறுதிப்படுத்த விரும்பினர். 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்ட சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் மக்களின் இத்தகைய விருப்பங்கள் ஒரு முக்கியப் பங்கினை வகித்தன. இச்சூழ்நிலையில் 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் நிறுவப்பட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தியது. அமைதி மற்றும் பாதுகாப்பு, மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அனைத்துக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் முக்கிய கருப்பொருளாக இந்த மனித உரிமைகள் விளங்குகின்றன.

இ. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய சாதனைகளுள்ஒன்றுமனிதஉரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்கியதாகும். இந்த இலக்குகளை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கான ஓர் ஆணையத்தை நிறுவியது. எலினார் ரூஸ்வெல்டின் (முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் டி.ரூஸ்வெல்டின் மனைவி) வலுவான தலைமையால் வழிநடத்தப்பட்ட ஆணையம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இறுதியாக உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் 1948இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. பொதுச்சபையால் 1948ஆம்ஆண்டுடிசம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217A). இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது 1950ஆம் ஆண்டிலிருந்து வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்றும்அழைக்கப்படுகிறது. இதன்கொள்கைகள் பெரும்பாலான நாடுகளின் (185 நாடுகளுக்கும் மேல்) அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுவேஉலகில்அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.

 

மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்:

  • கண்ணியம்: வாழ்வதற்கான உரிமை, ஒருமைப்பாட்டிற்கான உரிமை, கட்டாய தொழிலாளர்முறை, அடிமைமுறை,இழிவான தண்டனை ஆகியவற்றிற்கான தடை.
  • நீதி: நேர்மையான விசாரணைக்கான உரிமை, குற்றத்திற்கு ஏற்றாற்போல் தண்டனை, ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்குட்படுத்தாத உரிமை.
  • சமத்துவம்: சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனம், மதம், பாலினம், வயது, திறமை மற்றும் இயலாமை ஆகியவற்றில் பாகுபாடின்மை.

 

மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்:

இயல்பானவை: அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

அடிப்படையானவை: இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்ற முடியாதவை: இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும்.

பிரிக்க முடியாதவை: மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை: இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை: இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.

 

மனித உரிமைகளின் வகைகள்:

மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரிமைகள் ஐந்து முதன்மைப் பிரிவுகளாக விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு.

வாழ்வியல் உரிமைகள்:

வாழ்வியல் (சிவில்) உரிமைகள் என்ற சொல் ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கத்தின் சட்டங்களால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுகிறது. இந்த உரிமைகள் அனைவருக்கும் சமமாக கருதப்பட வேண்டியவைகள் ஆகும். இதில் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத் தளையிலிருந்து விடுபடுதல், நியாயமற்ற முறையில் கைது செய்யாமை ஆகிய உரிமைகள் அடங்கும்.

அரசியல் உரிமைகள்:

அரசாங்கத்தை அமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் அரசியல் உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்வியல் உரிமைகளும், அரசியல் உரிமைகளும் நவீன மக்களாட்சியுடன் நேரடி தொடர்புள்ளவைகள் ஆகும். அவைகள் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து தனிநபரைப் பாதுகாக்கின்றன. மேலும் ஒவ்வொரு தனிநபரையும் தங்கள் நாட்டின் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க இவ்வுரிமைகள் வழிவகுக்கிறது. கருத்துச் சுதந்திரம், அமைதியாக கூட்டம் நடத்துதல், தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்குகொள்ளும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை மற்றும் தகவல்களைப் பெறும் உரிமை ஆகியவைகள் அரசியல் உரிமைகளுள் அடங்கும்.

 

சமூக உரிமைகள்:

ஒரு தனிநபர் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது ஆகும். சமூக உரிமைகள் என்பது வாழ்க்கைத் தரத்திற்கு தேவையானகல்வி, சுகாதாரம், உணவு, உடை, தங்குமிடம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய உரிமைகளை உள்ளடக்கியதாகும்.

பொருளாதார உரிமைகள்:

பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை என்பது அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் விரும்பத்தக்க வேலைக்குச் செல்வதாகும். ஒவ்வொரு தனிநபரும் தங்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை இருப்பதை உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு, நியாயமான ஊதியத்திற்கான உரிமைகள், நியாயமான வேலை நேரம், தங்குமிடம், கல்வி, போதுமான வாழ்க்கைத் தரம், மற்றும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் இதில் அடங்கும்.

கலாச்சார உரிமைகள்:

சமயச்சுதந்திரம், மொழியைப்பேசுவதற்கான உரிமை மற்றும் சமூகத்தின் கலாச்சார வாழ்க்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதற்கான உரிமை, தார்மீக மற்றும் பொருள் ஆர்வத்தைப் பாதுகாக்கும் உரிமை ஆகியவைகள் கலாச்சார உரிமைகள் ஆகும்.

 

மனித உரிமைகள் ஆணையம்:

மனிதஉரிமைகளைமேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) அதிகாரம் பெற்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன.

அ. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் நிறுவப்பட்டது. இது சுதந்திரமான, சட்டப்பூர்வமான , அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும். இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும். தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் (அ) 70 வயது வரை இதில் எது முன்னதாக வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. சட்டப்பிரிவு, புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் திட்டப் பிரிவு, பயிற்சி அளித்தல் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியனவாகும். இந்தியாவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மனித உரிமை ஆணையம் பொறுப்பாகும்.

ஆ. மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

தமிழ்நாட்டில் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 17இல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இது மாநில அளவில் செயல்படுகிறது. இது ஒரு தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியது. இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கும் (NHRC ஏற்கனவே விசாரிக்கும் வழக்குகளைத் தவிர).

மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்:

மனித உரிமைகள்

வாழ்வியல் (சிவில்) உரிமைகள்

மனித உரிமைகளானது தேசியஇனம், பாலினம், இன, மதம் மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் உரித்தானது.

சிவில் உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகள் ஆகும்.

மனித உரிமைகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் உரியதாகும்.

சிவில் உரிமைகள் நாட்டிற்கு நாடு அல்லது அரசாங்கத்திற்கு அரசாங்கம் பெரிதும் வேறுபடுகின்றன. இவை அரசியலமைப்புச் சட்டத்துடன் தொடர்பானவை.

எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளைப் பறிக்க முடியாது.

அந்தந்த நாடுகள் பல்வேறு வகையான சிவில் உரிமைகள் மூலம் சுதந்திரங்களை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியும்.

மனித உரிமைகள் பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமையப்பெற்ற அடிப்படை உரிமைகள் ஆகும்.

சிவில் உரிமைகள் சமூகத்தினால் உருவாக்கப்படுகின்றன.

 

மனித உரிமை நிறுவனங்கள்:

உலகெங்கிலும் பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த அரசுசாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன. அவைகளுள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International), குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (Children’s Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியனவாகும்.

குழந்தைக்கான உரிமைகள்:

1989ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் பிரிவு 1 இன்படி பதினெட்டு வயதுக்குட்பட்ட அனைவரும் ‘குழந்தை’ எனப்படுவர். குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அறிக்கை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வெளியிடப்பட்டது.

குழந்தை ஒரு முக்கியமான தேசியச் சொத்தாக கருதப்படுகிறது. தேசத்தின் எதிர்காலமானது அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு, வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைப் பொறுத்தது. எனவே அனைத்து வகையான சுரண்டல்கள் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

அ. கல்வி உரிமைச் சட்டம்

6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்குவதற்குச் சட்டப்பிரிவு 21A வழிவகைச் செய்கிறது.

ஆ. குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச்சட்டம், 1986)

இது 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

இ. சிறார் நீதிச்சட்டம், 2000 (குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)

இந்தச் சட்டம் போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களைச் சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

ஈ. போக்சோ (POCSO) சட்டம், 2012

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

 

பெண்கள் உரிமைகள்:

பெண்கள் மற்றும் சிறுமியின் உரிமைகளும் மனித உரிமைகளாகும். பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும் சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவைகள் மனித உரிமைகளுக்கான அடிப்படைகள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதிசெய்கிறது.

1979ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டது. இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என அழைக்கப்படுகிறது.

1995ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு, பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள் இந்த இலக்குகளை அடைவதற்கு தேவையானவற்றை கண்காணிக்கிறது. மேலும் பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. பெண்களும் சிறுமிகளும் உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் போதுதான் உண்மையான சமத்துவம் நிலவுகிறது.

 

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம், 2007:

இந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பராமரிப்பை வழங்குவதற்கும் அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்களின் சட்டப்பூர்வமான கடமையாகிறது. முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

சட்டங்கள்

விதிகள்

இந்து விதவை மறுமணச் சட்டம், 1856

விதவைகள் மறுமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியது.

இந்து திருமணச் சட்டம், 1955

பெண்களின் திருமண வயது 21 என்று சட்டப்பூர்வமாக்கியது.

இந்து வாரிசு சட்டம், 1956

பெண்கள் தங்கள் பெற்றோர்களின் சொத்தினை மரபுவழியாக பெறுவதை உறுதிசெய்கிறது.

வரதட்சணைத் தடைச் சட்டம், 1961

வரதட்சணை என்ற பெயரில் மருமகளை மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது.

பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரானச் சட்டம், 1997

பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

அநாகரிகமாக சித்தரித்தலுக்கெதிரான சட்டம், 1999

பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தலைத் தடைசெய்கிறது.

தொழிற்சாலைச் சட்டம், 1948

தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951

சுரங்கச் சட்டம், 1952

மகப்பேறு நலச் சட்டம், 1961

பெண் தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது.

குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005

கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

 

மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். மனித உரிமைகளுக்கான புரிதலும் மரியாதையையும் நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது.

 

உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR):

வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள்பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும். அடிப்படை மனித உரிமைகள் உலகளவில் பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள்:

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுக்குப்பின் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள். ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள். ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள். பண்பாட்டு மகிழ்வில் சமத்துவம், மனித கண்ணியம், பாகுபாடின்மை ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்:

அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள். ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.

‘குடிமை உரிமைகள்’ என்பன ஒவ்வொரு மனிதனுக்கும் இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடுகளின்றி, அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.

அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகளே ‘அரசியல் உரிமைகள்’ ஆகும், இவை சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரத்தை இவ்வுரிமைகள் அளிக்கின்றன.

 

இந்தியாவில் அடிப்படை உரிமைகள்:

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை குடிமக்களுக்கு பேசும் உரிமை, விரும்பிய இடத்தில் வாழும் உரிமை போன்ற மேலும் சில உரிமைகளை வழங்கி மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

அடிப்படை உரிமைகள்:

  1. சமத்துவ உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
  4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
  6. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவ உரிமை:

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும். சமயம், இனம், பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுப்படுத்தலோ, ஒதுக்குதலோ சட்டத்திற்கு புறம்பானதாகும். அவ்வாறு நடத்தப்பட்டால் ஒருவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

சுதந்திர உரிமை:

ஆறு வகையான சுதந்திரங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

  1. பேச்சுரிமை.
  2. ஆயுதமின்றி கூடும் உரிமை.
  3. சங்கங்கள் அமைக்கும் உரிமை.
  4. இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை.
  5. இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை.
  6. எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை

சுரண்டலுக்கு எதிரான உரிமை:

14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எந்த ஒரு ஒப்பந்ததாரரோ, முதலாளியோ ஒரு தொழிலாளியை அவரது விருப்பத்திற்கு எதிராக ஒரு வேலையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை:

குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது. குடிமக்கள் சில சமய நம்பிக்கைகளை ஏற்று பின்பற்றுவதற்கு அல்லது சமய நம்பிக்கைகளின்றி தங்கள் மனசாட்சிபடி வாழ்வதற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்:

அரசியலமைப்பு கூட்டம் பண்பாட்டினைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமையை வழங்கியுள்ளது. கல்விக்கூடங்களை அமைக்கவும், நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் நமக்கு உரிமை உள்ளது. சமயச்சார்பு கல்வி அளிக்க மக்கள் மத நிறுவனங்களை நிறுவலாம். அரசு அதற்கு மானியங்களை வழங்குகின்றது. இருப்பினும், சாதி, நிற, இனம் அல்லது சமய வேறுபாட்டினைக்காரணம் கூறி யாருக்கும் இவ்வகை நிறுவனங்களில் அனுமதி மறுத்தல் கூடாது.

அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை:

அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தினால் உத்திரவாதம் தரப்பட்டவை. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது. ஒரு செயல் அரசியலமைப்பு சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசியலமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன. இவ்வாறு, இவ்வுரிமை அனைத்து உரிமைகளுக்கும் பாதுகாப்பாகவும், காவலாகவும் அமைகின்றது.

 

 

 

 

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள்:

மனித உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத் தோடும் வாழுகின்ற உரிமைகள்.

அரசியலமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.

மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை உரிமைகளில் அடங்கும்.

மனித உரிமைகள் பன்னாடு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.

அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.

 

இந்திய மனிதஉரிமைகள் ஆணையம் (National Human Rights Commission):

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

  1. மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  2. மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  3. மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  4. சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  5. மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

 

மாநில மனித உரிமைகள் ஆணையம் (State Human Rights Commission):

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும். மேல் அதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்று விதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்:

  1. மாநில பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தான மனித உரிமை மீறல்களை விசாரித்தல்.
  2. இதன் நோக்கங்களும் பணிகளும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தைப் போன்றே உள்ளன. ஆனால் மாநில எல்லைக்குட்பட்டதாகும். இவ்வாணையத்தில் ஒரு தலைவரும் இரு உறுப்பினர்களும் உள்ளனர்.
  3. இவ்வாணையத்திற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. எனவே, தொடுக்கப்படும் வழக்குகள் அல்லது தானாக முன்வந்து தொடுக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கலாம்.
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க பரிந்துரைகளும் செய்யலாம்.

குழந்தைகளுக்கான உரிமைகள்:

அரசியலமைப்பினால் விளக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கடந்து நாம் வேறு சில உரிமைகளையும் உறுதி செய்தல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 18 வயதுவரையுள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 25ல் காணப்படுகின்றது. இக்கொள்கைகளின் அடிப்படையில் ஐ.நா.சபை 1989ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.

  1. வாழ்வதற்கான உரிமை
  2. குடும்பச் சூழலுக்கான உரிமை
  3. கல்விக்கான உரிமை
  4. சமூகப் பாதுகாப்பு உரிமை
  5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
  6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை
  7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை

வாழ்வதற்கான உரிமை:

ஒரு குழந்தை பிறப்பிற்கு முன்பே அது வாழத்தகுதி பெறுகின்றது. வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை, அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

 

குடும்பச் சூழலுக்கான உரிமை:

ஒரு குழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச் சூழலில், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு. ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது அனாதைக் குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

சமூகப் பாதுகாப்பு உரிமை:

உடல் நலமின்மை, இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால், குழந்தைகளுக்குத் தரமான வாழ்வைத் தர இயலாத சூழ்நிலையில் அக்குழந்தைகளுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

கல்விக்கான உரிமை:

அரசியலமைப்பின் பிரிவு 21Aல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

குழந்தை விற்பனை அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை:

குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் எனக் கருதுதல் வேண்டும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல் நடைபெற ஏழ்மை, பாலினப்பாகுபாடு, சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கிய காரணங்களாகும்.

குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

பாலியல் தொந்தரவுக்கெதிரான உரிமை:

குழந்தைகள் உடலளவிலோ, மனதளவிலோ பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படும்போது, மாநில அரசு அக்குழந்தைகளைப் பாலியல் சுரண்டலிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கு எதிரான உரிமை:

பல்வேறு தொழிலகங்களில் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தினையும், உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றையும் இழக்கின்றனர். இது வறுமை மற்றும் தேவைகள் நிறைவேற்றப்படாத வாழ்விற்கு வழிவகுக்கும். இக்குழந்தைகள் கண்ணாடி, தீப்பெட்டி, பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், குப்பை பொறுக்குதல், கம்பளம், பீடி தயாரிப்பு, சுரங்கவேலை, கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.

வேலைவாய்ப்புகளில் பாலினப்பாகுபாடு காணப்படுகின்றது. பெண் குழந்தைகள் வீடு சார்ந்த வேலைகளிலும் ஆண் குழந்தைகள் கூலி வேலைகளிலும் பணியமர்த்தப்படுகின்றனர். இக்குழந்தைகள் விவசாய நிலங்கள், உணவகங்கள், வாகனங்களைப் பழுது பார்க்கும் பட்டறைகள் மற்றும் குடிசைத் தொழில்களில் பணிபுரிவதால், குழந்தை உழைப்பை ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.

குறைபாடுகள் உடைய குழந்தைகளே, மற்ற குழந்தைகளை விட 3.4% அதிகமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என உலகளாவிய ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

பெண்களுக்கான உரிமைகள்:

இந்தியாவில் பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு பெண்களுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பினை மீளாய்வு செய்து உறுதிப்படுத்துகிறது. பெண்களுக்கான நலவாழ்வு மற்றும் வளர்ச்சி குறித்த அரசின் அனைத்து செயல் திட்டங்கள் மீதான தனது கருத்தையும் மாற்றுக் கருத்துக்களையும் இவ்வாணையம் பரிந்துரை செய்கிறது.

குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற அவைத்தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் என இந்தியாவின் முக்கிய பதவிகளில் பெண்கள் பதவி வகிக்கின்றனர். இந்திய அரசியலமைப்புசட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளில் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் ஆகியன அடங்கும். பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மேலும் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பெண்கள் உரிமைகளில் சமத்துவம், கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் ஆகியன அடங்கும். பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் மேலும் பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர், ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 69% இடஒதுக்கீட்டைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

மேலும் பெண்களுக்கு 30%, மாற்றுத் திறனாளிகளுக்கு 4% முன்னுரிமை அடிப்படையில் ஒவ்ெவாரு பிரிவின்கீழும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒவ்ெவாரு பிரிவின்கீழும் முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

 

 

 

தகவல் அறியும் உரிமைச்சட்டம்:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஓர் புரட்சிகரமான சட்டமாகும். அரசு நிறுவனங்களின் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான இச்சட்டம் இந்தியாவில் 2005 அக்டோபர் மாதம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தேவைப்படும் தகவல்களை எந்த ஒரு சாதாரண குடிமகனும் கோரிப் பெறலாம். தகவல்கள் 30 நாட்களுக்குள் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் தகவல் வழங்கும் அதிகாரியிடமிருந்து கட்டணமாக ஒரு குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படும்.

நாட்டின் வலிமை வாய்ந்த சட்டங்களுள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் ஒன்றாகும். இச்சட்டம் மிகவும் எளிமையானதாகவும், சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தின் வாயிலாக தகவல்களைப் பெற படிக்கத் தெரியாதவர்களுக்கு பொதுத்தகவல் அலுவலர் உதவி செய்ய வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் அதாவது ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு அரசுத் துறைகள், அரசுப் பள்ளிகள், நெடுஞ்சாலைத் துறைகள் போன்றவை இச்சட்டத்திற்கு உட்பட்டதாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் அரசு ஆவணங்களான கோப்புகள், அறிக்கைகள், தாள்கள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் போன்றவைகள் கிடைக்கப்பெறலாம். நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளான எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPR) மற்றும் உளவுத்துறைப் பணியகம் (Intelligence Bureau) ஆகிய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

  • விண்ணப்பத்தில் உங்கள் முழுபெயர், முகவரி எழுதி கையெழுத்திட்டு தேதியுடன் பதிவு தபாலின் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

அனுப்பப்பட்ட அஞ்சலுக்கு 30 நாட்களுக்குள் பதில் பெறப்படவில்லை எனில் 1 விண்ணப்பத்தை மேல்முறையீடுக்கு அனுப்பலாம்.

தொழிலாளர் உரிமைகள்:

சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை, இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

“ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது” என்றார் ஜான். எஃப். கென்னடி. உலகின் நாகரிகமடைந்த நாடுகள் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. சமத்துவத்தை உறுதி செய்ய, நாடுகள் மனித உரிமைகள் மீது கவனம் செலுத்துகின்றன. இது ஒரு நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

 

இறுதிக்கு வந்த இன ஒதுக்கல் கொள்கை:

இன ஒதுக்கல் (Apartheid) தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட இனப்பாகுபாடு ஆகும். வசிப்பிடங்களும் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையிலான வெள்ளைஇனத்தவர் அதிக எண்ணிக்கையிலான கறுப்பினத்தவரின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்த இனஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினர்.

நெல்சன் மண்டேலா இன ஒதுக்கல் எனப்படும் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியபோது, சிறையில் தள்ளப்பட்டார்.

உள்நாட்டிலும், உலக நாடுகளிடமிருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு பெருகியபோது, இனரீதியான உள்நாட்டு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தினால், தென்னாப் பிரிக்க தலைவர் F.W. டி கிளார்க் 1990-ல் அவரை விடுதலை செய்தார்.

மண்டேலா மற்றும் டி கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது. 1994ல் பல்லினப்பொதுத் தேர்தல் நடைபெற்றபொழுது, மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று, அந்நாட்டின் தலைவரானார்.

நீதிப் பேராணை (writ) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அச்செயலை தடுக்கவோ, நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு.

அரசியலமைப்புச் சட்டங்களுக்கான உரிமையின்படி பிரத்திகா யாஷினி நீதிமன்றத்தை அணுகியதின் மூலம் தனது வேலைவாய்ப்பு உரிமையை வென்றார்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (Right of children to free and compulsory education) 2009, ஒவ்வொரு குழந்தையும் தொடக்கக் கல்வி பயில உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துகின்றது. இவ்வுரிமை, குழந்தைகள் தொடக்கக் கல்வி முடியும் வரை அருகாமையில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வழிவகை செய்கிறது. கல்வி பயிலும் குழந்தை எந்த வகையான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஆபத்து காலத்தில் உதவிட காவலன் SOS செயலி தமிழ்நாடு அரசினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி, சிக்கலான அல்லது நெருக்கடியான சூழலில் இருக்கும் அனைவரும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையினை இச்செயலியின் உதவியோடு எளிதாகவும், நேரடியாகவும், தொடர்பு கொள்ள இயலும்.

POCSO சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (The Protection of children from sexual offence Act, 2012) ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது.

POCSO சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

  • இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது; அக்குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
  • பாலியல் வன்கொடுமையில் அதிகாரத்தில் இருப்பவரோ, குடும்ப உறுப்பினரோ, அண்டை வீட்டாரோ அல்லது அறிமுகமானவரோ ஈடுபட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும்.
  • குழந்தை என்ன வாக்குமூலம் கூறுகிறதோ, அதை அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

பனிரெண்டு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும்போது, வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகைசெய்யும் சட்டம் 2018 ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டது. குற்றவியல்சட்ட திருத்தச்சட்டம் 2018. இது இந்திய குற்றவியல் சட்டத்தில் கடுமையான திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதாகும்.

1098 – 1098-உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் (Child line) இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை ஆகும். குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

பச்பன் பச்சாவ் அந்தோலன் (இளமையைக் காப்பாற்று இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தி. அவர் குழந்தை உழைப்பு, கொத்தடிமை, கடத்தல் போன்ற பல குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து சுமார் 86,000த்திற்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் இவராலும், இவரது குழு உறுப்பினர்களாலும் மீட்கப்பட்டுள்ளனர். 1998ல் உலக மக்களின் கவனத்தை குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப, 80,000கி.மீ. நீள ‘குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை (Global March against child labour) முன்னின்று நடத்தினார்.

 

இந்திய அரசியலமைப்பில் குழந்தைகள் உரிமை:

பிரிவு24: பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது.

பிரிவு45: பதினான்கு வயது நிறைவடையும்வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் தேசத்தின் அடித்தளமாக விளங்குகின்றனர். சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும்போது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வு போன்ற பல சலுகைகளை அவர்கள் இழந்து விடுகின்றனர். இதனால் குழந்தைத் திருமணங்கள் சமூகத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. எனவே குழந்தைத் திருமணங்கள் அனைத்து விதத்திலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெண்களுக்கு மூதாதையர் சொத்துரிமை:

தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989 ஐ நிறைவேற்றி மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது, மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005-இல் திருத்தங்களை மேற்கொண்டது. இதில் மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளித்தது.

பெண் தொழிலாளர் நலனும்-டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும்:

சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம், பெண் தொழிலாளர் நல நிதி, பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம், பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள், நிலக்கரிச் சுரங்கங்களில் சுரங்கப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தப்படவதற்கான தடையை மீட்டெடுத்தல் போன்ற சட்டங்கள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களால் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

பத்து ஆண்டுகளாக கேரளாவில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வேலை செய்யும் பெண்கள் ஒரு நாளில் ஏறக்குறைய 12-14 மணிநேரம் நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.

கடைகளிலிலும், வணிகவளாகங்களிலிலும் வேலை செய்யும் பெண் பணியாளர் அமர்ந்தோ, சுவரில் சாய்ந்தபடியோ பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு, இருமுறை 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த மனித தன்மையற்ற செயலுக்காக நீண்ட நாள்களாக பெருத்த கண்டனக் குரல்கள் ஒலித்து வந்தன.

இப்பிரச்சனையைப் பரிசீலித்து குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கேரள அரசு வணிக நிறுவன சட்டத்தில், 2018 ஜுலை மாதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் பெண்கள் இத்துயர் நீங்கி வெற்றி கண்டுள்ளனர்.

 

தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்புகள்:

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு
  • தொழிற்சங்கங்களின்கட்டாய அங்கீகாரம்.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  • தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)
  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  • நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

 

Scroll to Top